Featured Post Today
print this page
புதிய படைப்புகள்

தூரத்தில் சில கட்டுமரங்கள்


       அகோர பசி. வீட்டில் வைக்கும் மஞ்சதண்ணி குழம்பு வாசனை பசியின் வேகத்தை இரட்டிப்பு ஆக்கியது. சின்ன உள்ளி, ஜீரகம் வெந்த வாசனை மீனின் வாசத்துடன் கலந்து வீடு முழுக்கப் பரவியிருந்தது.
     காலையில் அருகில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கிடைத்த மீன் விற்று முடித்து படகை சுத்தம் செய்து, சேமிப்புக் கிடைங்கையும் சர்ப் போட்டு கழுவி விட்டு வீடு கிள்மபலாம் என்று நினைத்தால் கிழிந்து போன இழுவை வலையை தொழிலாளிகளுடன் இறக்கி மடிக்கட்டியிடம் ஒப்படைத்து விட்டு வீடு வருவதற்குள் மணி பன்னிரெண்டு தாண்டிவிட்டது.
     ஓகிப் புயலுக்குப் பிறகு முதல் ஓட்டு. தொழில் செலவுக்கு ஓடும் என்ற நிலை. கடப்புறத்துகாரன் கொண்டுவர மீன் நெனைச்ச விலைக்கு விக்க முடியாது. வியாபாரிகள் நெறைய பேரு வந்து குவிஞ்சாலும் ஒன்னுரெண்டு பேர தவிர யாரும் பெருசா ஏலம் கேக்கிரதில்ல...சொல்லி வைக்கிறமாதிரி மீன் நெனச்சதவிட கொறஞ்ச வெலக்குதான் விக்கும். இது எழுதப்படாத விதி. காத்தையும் கடலையும் சமாளிச்சு மீன் பிடிக்கிறவனுக்கு அவன் படுத்த மீனுக்குள்ள விலைய அவன் நிர்ணயிக்கிற காலம் என்னிக்குதான் வருமோ. மீன் பிடிச்சமா..வித்தமா...வீட்டுக்கு வந்து நாலுபிடிச் சோற வாயில போட்டுட்டு அப்பாடானு கிடந்து உறக்கச் சீனம் தீருமுன்னால எழும்பி மறுபடியும் ஆர்பாருக்குப் போய் ஐஸ் எடுத்து டீசல் பிடிச்சு தொழிலுக்குப் போற வாழ்க்கையில என்னத்த செய்ய முடியும். யாவாரிகள் அடிக்கிற கொள்ளை..ஊர்ல நடக்கிற பிரச்சனை, அரசியல்ல நடக்கிற அட்டூழியம் எதிலயும் மனசு லயிக்காம இன்னிக்குத் தொழிலுக்குப் போனா பாடு ஓடுமா..நாலு பணம் சம்பாதிச்ச முடியுமானுதான் கவலையே தவிர, ஊரும் நாடும் எப்படி கெட்டுப் போனா நமக்கென்னனு ஒரு நெனப்பு வருது பாருங்க..அதுக்க பின்னாடி ஒரு இயலாமையும் பெரு மூச்சும் வரும் பாருங்க அதுதாங்க என்னைப் போல மீனவன் வாழ்க்கை. நெனைக்கிரதை செய்ய முடியாது ஆனா எல்லாமே கெடச்சமாதிரி நிறஞ்ச வாழ்க்கைதான் கடல் வாழ்க்கை.
"மஞ்சதண்ணி காஞ்சியாச்சு...சாப்ட வாங்க..?
மனைவியின் குரல் கேட்ட போது. மணி பார்த்தேன். மணி நண்பகல் ஒரு மணி நெருங்கிக் கொண்டிருந்தது. காலை உணவை மதியமும், மதிய உணவை பிற்பகலும் உண்பது பழகிவிட்டதால் இதெல்லாம் பெருசா தெரியாது. சாப்டுட்டு ஒரு தூக்கம் மணி மூணு ஆகும்.. பல்லு தேச்சி மொகம் கழுவினா மறுபடியும் பசி எடுக்கும். மதிய சாப்பாடு ரெடி. இங்கயாவது இப்படிச் சாப்பிட முடியுது கடலுக்குப் போனா நெனச்ச நேரம் சாப்பிடவா முடியும். சாப்பாட்டுல கைவச்ச போகும் போதுதான் மடி பிடிங்க மடி பிடிங்கனு கீ அடுச்சுவாரு ஸ்ராங்கு.
தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட அமர்ந்தேன். தட்டில் சோற்றுடன் வகை வகையாய் மீன்கள் வெந்து கிடந்தன.
"என்ன எல்லா மீனையும் எனக்கே வச்சிட்ட போல.."
"ஆமா..எனக்கு மீன் தின்ன இஷ்டமில்ல"?
"யான்..என்னாச்சு நீதான் நல்லா மீன் சாப்பிடுவியே..!"
"இல்லீங்க வாட்ஸ் அப் இந்த மெசேஜ பாத்ததிலேர்ந்து மனசு சரியில்ல.." - சொன்னவள் தன் மொபைலில் வந்திருந்த புகைப்படத்தை எனக்குக் காண்பித்தாள்.
வாய்க்குள் போன மீன் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது எனக்கு. அந்த படத்தில் விசைப்படகின் அட்டிப் பகுதியில் இருக்கும் பரப்பில் மடியும் மீங்களும் பரவிக்கிடக்க பாதிக்க்கு மேல் சிதைந்திருந்த மனித உடல் கிடந்தது.
மரணம் எல்லா மனிதனுக்கும் உண்டு என்றாலும் இப்படி ஒரு கொடூர மரணம் யாருக்கும் வந்துவிடக்கூடாது. என்று அழவேண்டும் போல் மனசு தவித்தது. நானும் ஓகிப் புயலில் தப்பிக் கரைவந்தவந்தான். எனக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால்..! யாருக்கு விதி எங்கு என்று யாருக்குத் தெரியும்.
"என்னங்க சாப்பாட்டை அப்படியே வச்சிட்டீங்க..?"
"வேண்டாமா....முடியல..எத்தன உயிர் எத்தன குடும்பம் இப்ப நட்டாத்துல நிக்கி..இத்தன வருஷ கடல் தொழில்ல எத்தன மரணத்தை நான் பாத்திருக்கேன்..ஆனா இப்படி என் மனச அசச்சல..ஒவ்வொரு உயிரும் போகும் போது என்ன பாடு பட்டிருக்கும். என்னென்ன ஏக்கமெல்லாம் வந்திருக்கும். மக்க மொகம்,பெண்ட்டாட்டி முகம்..மனசுல வந்து யாராவது வந்து காப்பாத்த மாட்டாங்கனு ஏங்கும் போதுதான் எங்களை ஒரு கப்பல்காரன் வந்து காப்பாத்துனான்...அதனாலதான் ஒன் கண்முன்னாடி நான் இருக்கேன்..ஒனக்க மாப்பிள்ளயா இருக்கேன், ஒன் மக்களுக்கு அப்பனா இருக்கேன்..இல்லேனா என் நெலமையும் இதுதான்..?"
"சரி சரி அத நெனச்சு மனசு தளந்திடாதிங்க கடலை நம்பிதான் நம்ம வாழ்க்கை..இல்லேனா யாரு கைகொடுப்பா..அரசாங்கம் படிச்சு முடிச்சவனுக்கே வேலை கொடுக்க வக்கில்லாம இருக்கு இதில நம்ம மீனவர்களும் கடல் தொழிலை விட்டா அரசாங்கம் நல்லா கை தூக்கும்."
"வேலைய உடும்மா...அத நாங்க பாத்துப்போம் ஒரு காத்து கடலுனு வந்தா ஓடி வந்தாலே போதும்..சரி ஆக வேண்டியத பாப்போம்..நான் கொஞ்சம் சரியுரேன்..மூணு மணிக்கெல்லாம் எழுப்பி உட்டுடு" - சொல்லி விட்டு உள்ளறையில் சென்று பாயை விரித்தேன்.
     கண்ணசர நினைத்தாலும் மனசு சதா எதையோ போட்டு அலம்பிக்கொண்டு இருக்கும் சில நேரங்களில். என் நிலை இப்போது அதே நிலைதான். மனசில் மனுஷன் முழுமையாய் குடியேறி இருந்தான். வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்களில் நாம் மிருகங்கள் என்று நான் சொன்னாலும் யாரும் ஒப்புக் கொள்ளப்போவதில்லை.
     டுக்கடல் கண்ணுக்கெட்டிய தூரம் கடல் கடல் கடல் வேறொன்றும் இல்லை. அன்னாந்து பாத்தால் வானம். இதுதான் கடலுக்குள் தெரியும் உலகம். அவ்வப்போது பறக்கும் பறவைகள். எப்போதாவது வரும் ஒன்றிரண்டு கப்பல்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வலை இழித்துக்கொண்டு ஓடும் விசைப்படகுகள் என்று ஆழ்கடல் அமானுஷமும், ஆரவாரமும் உள்ளடக்கியது. ஒவ்வொருவருக்கும் அவரவர் போட்டுத்தான் உலகம். வீலஸீல் தொடர்ந்து ஒலிக்கும் ஒயர்லெஸ் கருவிகளின் ஒலிபரப்பில் நமக்கு வெளியே இதே கடலுக்குள் இருக்கும் இன்னொரு விசைப்படகின் இன்னொரு கடல் வளப்பங்களின் ஒலிபரப்பும் தவிர்க்கமுடியாதவை. பலவிதமான சேலுக்கும், கலகலப்புக்கும் பஞ்சமில்லாத தருணங்கள் அவை. யாரைப் பற்றி சில நேரங்களில் பேசுகிறோமோ அவர்களே எங்கிருந்தாவது கேட்டுக்கொண்டிருக்கலாம் போல் திறந்தவெளிப் பேச்சுகளில் வெள்ளேந்தித் தனமும், விமர்சங்களும் கலந்துவருவது செயற்கைத்தனமான எஃப் எம் ரேடியோக்களுக்கு உண்மையில் சவால்தான்.
   அதிகாலை நேரம். சட்டென்று விழிப்புத் தட்டியது. வானம் கருமையின் சாயலிலிருந்து விடுபடாமல் ஏனோ பிடிவாத்தத்துடன் இருண்டு போய் காட்சியளித்தது. காற்றின் வேகம் சற்று கூடி இருக்க விடியற்காலை நட்சத்திரங்களற்ற வானம் துக்க வீட்டில் ஏற்றப்படும் கருப்புக் கொடிபோல் தோற்றமளித்தது.
     என்னாச்சு இன்று காற்று வேறு வழக்கத்தைவிட சற்று வேகம் கூடிக் கொண்டிருந்தது. நங்கூரம் போடப்பட்டிருந்த விசைப்படகு காற்றின் வீச்சில் சீறிக்கொண்டு கடல் அலையின் உயரதிற்கேற்ப ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
      "எல்லாரும் எழும்புங்க ஆங்கர வளிங்க...வல போடணும்"  - படகின் கேப்டனின் குரலுடன் பஸ்ஸர் ஒலியும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அனைவரையும் உசுப்பியது. பின்னிரவில் தூங்க சென்றதால் பலருக்குத் தூக்கம் லேசில் விடுபடவில்லை. ஆனாலும் முனகிக் கொண்டு எழுந்து அமர்ந்தார்கள். வெற்றிலை போடுபவர்கள் வெற்றிலை தாளை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு இன்னும் எழும்பாத சிலரை அதட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
"என்னா..போட்டு கெடந்து இந்த ஆட்டம் ஆடுது..?" - கேப்டன் வயதில் மூத்த அம்புரோஸிடம் கேட்டார்.
"சேலு பெலமா உளும் போல இருக்கு..வானம் மேக மூட்டமா வேற இருக்கு ஒரு வெள்ளியக்கூட காண்டுல..காத்துவேற நேரம் ஆவ ஆவ ஊதிண்டு வாரு" - வெற்றிலை மெல்லும் வாயுடன் அம்புறோஸ் சொல்ல ஒயர்லெஸ்சில் பதட்டமான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
"யே...அமல அன்னை போட்டு லேர்ந்து பேசுரோம்...காத்து ஒரப்பா நிக்கு குளம் போல கெடந்த கடலு தாறுமாறா கெடக்கு...கீழா பொயல் உழுந்தாச்சாம் மேலா ஓடி தப்பிடுங்க.."
கேப்டன் உசாரானார்,"...சீக்கிரம் சீக்கிரம் ஆங்கர எழுப்புங்கப்பா...காத்து உழுந்து வாரு கொஞ்சம் பிந்தினா போட்டும் கெடச்சாது ஆளும் கெடச்சாது"
ஆங்கர் வடம் வீஞ்சியில் சுத்தப்பட்டது. கிர்ர்...கிர்ர்...சத்ததுடன் வடம் மேலேறியது. காற்றின் வீச்சம் நேரம் ஆக ஆக கூட ஆரம்பித்தது. படகு அங்கும் இங்கும் கடலுக்குள் கவிழ்ந்து விடுவதுபோல் ஆடியது. யாராலும் கால் பதிய படகின் தளத்தில் நிற்க முடியவில்லை. இதற்கிடையில் மழை வேறு தூற ஆரம்பித்தது.
"எத்தனை சேலும் கடலும் பாத்திருக்கென்...இப்படியா வருளம் உளும்...போற போக்க பாத்தா...ஒன்னும் எத்தாது..ஏ..ஸ்ராங்கு ஆங்கர் கம்பாவ வெட்டி உட்டுட்டு ஓடுவோம்..இந்த சேலுக்கு ஆங்கர் போட்டுல ஏறாது...மாரியா வேற போட்டு அணியத்துக்கு மேல கெடந்து அடிச்சுது"
"நீங்க சொல்றதுதான் சரி..பெரியாளே..கம்பாவ வெட்டி உடுங்கப்பா...லே...குமாரு கத்திய எடு கத்திய எடு..."
"கத்தி எங்கப்பா இருக்கு?"
"வீலஸ் அறைக்குள்ள ஒரு டப்பா இருக்கு பாரு...சீக்கிரம் எடுப்பா.."
"சமயத்துக்கு ஒரு பொருளும் வச்ச எடத்தில இருக்காது..இந்த போட்டுல.." - எப்படியோ கத்தியை தேடிப் பிடித்து குமார் ஆங்கர் வடத்தைத் தேடி ஓடினான்.
எனக்கு நெஞ்சு பதைபதைத்தது  என் இருபது இருபத்தஞ்சு கடல் அனுபவத்தில இப்படி ஒரு சேலும் காத்தும் உழுந்து நான் பாத்ததில்லை. இது சாதாரண காற்றுபோல் தோன்றவில்லை. நிச்சயமாக அற்பது எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறமாதிரி தோன்றியது.
"எல எல்லாரு வீலசுல வாங்க..சுரேசு கம்ப்பா வெட்டியாச்சே..வா...வா வெளிய யாரும் நிக்காதீங்க..எல்லாரும் வீலசுக்குள்ள வந்திடுங்க...யேசுவே..மாதாவே காப்பாத்துங்க..."
எல்லார் மனதிலும் ஓலச்சத்தம் கேட்டது. இது பெரிய பிரளயம். நாங்கள் நினைத்தது போல் உடனே நிற்கின்ற காத்துபோல் தெரியவில்லை. வீலசுக்குள் இருந்த எனக்கு ஒண்ணுக்கு முட்டியது. பைய்ய பைய்ய னகர்ந்து வீலசை விட்டு வெளியேவந்தேன்.
"லே வெளிய போகாத...இங்கேர்ந்தே அடிச்சுவிடு...யே..யம்மா...போட்டு போச்சப்ப்பா...ஆளு இருக்க முடில...என் காதில் விழுந்த குரல் மெல்ல மெல்ல தேய்ந்து போய்க்கொண்டிருந்தது..நான் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டது தண்ணீருக்குள் விழுந்த பின்புதான் உணர்ந்தேன்.

0 comments

முன்னிருக்கை பேசுகிறது


விடுமுறை நாளில்
ஒரு பேருந்து பயணத்தில்
முன் இருக்கையின்
பின்னால்
எழுதப்பட்டிருந்த
இரு பெயர்களும்
காமமோ 
காதலோ
அல்லது
இரண்டும் கெட்ட 
ஏதோ ஒன்றை 
புரிய வைக்கும்
முயற்சியையோ...
உணர்சியின்
வடிகாலிலோ
நடைபெற இருந்த
குற்றமொன்று
மையோடு
மரணித்து
இரவின் விந்தில்
கரைந்து போய்
மறு நாள் மீண்டும்
எழுகிறது
காதலின் இன்னொரு முகமாய்

2 comments

சைவம் செத்தால்..


சைவ ஓட்டலில்
உணவுண்ணச் சென்றேன்
இலையில்
சைவம் வகை வகையாய்
செத்துக்கிடக்க
அசைவம் உண்டேன்..!

0 comments

வாடிய பூவின் வாசம்


ஒரு முழம் 
மல்லிகைச் சரம் 
கரு கரு கூந்தலில் சூடி
வந்தது பூ
பூவிடம் வினவியது
வண்டு
சூடிய பூ வாடியபின்
என்ன செய்வாய் என்று
இது என்ன கேள்வி
பூ சிரித்துவிட்டுச் சென்றது
மெல்லிய வெளிச்சம் மிதக்கும்
இருள் போர்வைக்குள்
பூ களைந்த பூவின்
கூந்தல் முதலாளியை
முகர்ந்த வண்டு சொன்னது
பூ நீ கழற்றி எறிந்த
பூவில் இல்லை
வாசம்
அடைத்து உப்பிய 
பல பூக்களை
இளம் சூட்டில் 
பறிமாறியபின்
களைப்பு புல்வெளியில்
கண்ணயர்ந்த
கணத்தில் காணாமல் போனது வண்டு
கதறி அழுதது பூ
அறையின்
மூலையில் கிடந்த
வாடிய பூவும்.

0 comments

காதல் யுத்தம்


கருத்து யுத்தத்தினால்
நம் காதல் யுத்தம்
தற்காலிகமாய்
நின்று போனது..!
மௌனங்கள் நிரம்பிய
பனிப்போரில்
நாட்கள்
நத்தையாய் நகர்ந்து போயின..!

உனக்கான பாசத்தை நானும்
எனக்கான பாசத்தை நீயும்
போட்டி போட்டு
நம் பிள்ளைகள் மேல்
காண்பிக்கிறோம்..!

திடீர் பாச அதிகரிப்பில்
மிரண்டு போகின்றன
நம் மழலைகள்..!

என் தனிமையில் நெறிக்கும்
நிரந்தர பிரிவு பயம்
உன் தனிமையிலும்
தகிக்கிறது என்பதை
சொல்லாமல் சொல்லுகிறது
உன் நடையில் தெரியும்
சின்ன சின்ன மாற்றங்கள்..!

மாலையில்
வீடு புகுகையில்
சற்று மிகையான ஒப்பனையும்
சிகையில் நீ சூடிய
சிறு மல்லிகை சரமும்
அமர்த்தலான புன்னகையும்
சமாதான உடன்படிக்கைக்கான
மறைமுக அழைப்புகள்..!

நாட்களின் காத்திருப்பில்
களைத்துப் போன நீ..
வெகுண்டெழுந்து
வளைகுடா யுத்தம் போல்
வளைத்து வளைத்து
தாக்குதல் நடத்துகிறாய்.!

உன் அத்தனை
அஸ்திரங்களின்
தாக்குதலிலிருந்து
எப்படியோ
தப்பி விடும் நான்
உன்
விழி ஏவுகணையிலிருந்து
தப்ப முடியாமல்
தரை மட்டமாகிறேன்..!

சட்டை காலரை இழுத்து
எனை சுவரோடு சாய்த்து
மூக்கோடு மூக்குரசி
கண்ணோடு கண் கலக்கும் போது
செத்துப் போகின்றன
என் அத்தனை கர்வங்களும்..!

என் உதடுகளின்
ஈரம் துடைக்கும்
உன் செயலால்  
இன்னும்
ஈரமாகிப் போனது
நம் உதடுகள்..!

நம் உஷ்ணத்தை
குறைக்கும் முயற்சியில்
தோற்றுப் போகிறது
மின் விசிறி..!

காதலின்  நறுமணம்
உன் உடல் முழுவதும்
உஷ்ணமாய் பரவுவதால் -
நீ விடும்
சுடும் மூச்சு
என் வெற்று மார்பை
வருடும் போது
தாய்நாடு திரும்பும்
அகதிபோல்
உன் மார்போடு
புதைந்து போகிறேன்.!

1 comments
 
Support : Emmess Info Tech
Copyright © 2014. கடிகை பெர்னாட் - All Rights Reserved

Proudly powered by Blogger